Thursday, May 08, 2008

436. செல்லாது! செல்லாது! - வேணுகோபால் பணி நீக்கம் பற்றி சுப்ரீம் கோர்ட்

வேணுகோபால் நீக்கம் சட்டவிரோதம்-சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
டெல்லி: டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக (எய்ம்ஸ்) இயக்குநர் பதவியிலிருந்து டாக்டர் வேணுகோபாலை நீக்க வகை செய்யும் சட்டத் திருத்தம் செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

எய்ம்ஸ் இயக்குநராக இருந்து வந்த டாக்டர் வேணுகோபாலுக்கும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது பெரும் மோதலாக வெடித்தது.

இந்த நிலையில், எய்ம்ஸ் மாணவர்கள், வேணுகோபாலுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தனர். இதற்கு வேணுகோபால்தான் காரணம், அவர்தான் போராட்டத்தைத் தூண்டி விட்டு வருகிறார் என்று அன்புமணி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

மேலும், வேணுகோபாலுக்கு எதிராக தீவிர நடவடிக்கையிலும் இறங்கினார் அன்புமணி. அதன் உச்சகட்டமாக நாடாளுமன்றத்தில் வேணுகோபாலை பதவியிலிருந்து நீக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்து நிறைவேற்றினர்.

அதன்படி 65 வயதை டாக்டர் வேணுகோபால் தாண்டி விட்டதால், அவர் இயக்குநர் பதவியில் நீடிக்க முடியாது என்று கூறி இயக்குநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதை எதிர்த்து டாக்டர் வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் சட்டத் திருத்தம் செல்லாது என்று இன்று அதிரடித் தீர்ப்பை அளித்தது.

வேணுகோபால் தாக்கல் செய்த மனுவில், தனது பதவிக்காலம் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை இருப்பதாகவும், இந்த நிலையில் சட்டத் திருத்தம் மூலம் தன்னைப் பதவி நீக்கம் செய்தது செல்லாது என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தருண் சாட்டர்ஜி, ஹரிஜித் சிங் பேடி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மத்திய அரசின் சட்டத் திருத்தம் செல்லாது, இது சட்டவிரோதமானது. மனுதாரரை மட்டுமே குறி வைத்து இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மிகவும் பாரபட்சமாக, தன்னை குறி வைத்து இந்த நடவடிக்ைக மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மனுதாரர் கூறியதை இந்த நீதிமன்றம் ஏற்கிறது.

இந்த வழக்கிலும், எய்ம்ஸ் ஊழியர் சங்கம் தாக்கல் செய்துள்ள இதே வழக்கிலும் இறுதித் தீர்ப்பு வரும் வரை இயக்குநர் பதவிக்கு நிரந்தரமாக யாரையும் மத்திய அரசு நியமிக்கக் கூடாது என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து எய்ம்ஸ் இயக்குநராக டாக்டர் வேணுகோபாலை மீண்டும் நியமிக்க வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஜூலை மாதம் வரை அவர் தொடர்ந்து பதவி வகிக்கவும் மத்திய அரசு அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வேணுகோபாலை பதவியிலிருந்து நீக்கிய பின்னர் டாக்டர் டோக்ரா இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

நன்றி: thatstamil.oneindia.in


டெயில் பீஸ்:

இத்தீர்ப்பு பாராளுமன்ற முடிவுக்கு எதிரானது போல் தோன்றினாலும், அமைச்சர் அன்புமணி, வேணுகோபாலை விரட்டுவதற்காகவே, இந்த சட்டத் திருத்தத்தை பாராளுமன்றம் முன் வைத்து அது நிறைவேற்றப்பட்டது என்பது தெளிவாகவே தெரிகிறது! வேணுகோபாலோடு முட்டிக் கொள்வதற்கு முன்பாகவே, அமைச்சர் இந்த சட்டத் திருத்தத்தை கொண்டு வந்திருந்தால், சுப்ரீம் கோர்ட் 'சட்டத் திருத்தம் செல்லாது' என்று கூறியிருக்காது. அரசியல்வாதிகள் தங்கள் அதிகாரத்தை, தனிப்பட்ட விருப்பு/வெறுப்புகளுக்கு இடம் தரும் வகையில் பயன்படுத்தக் கூடாது என்பது இத்தீர்ப்பின் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. வேணுகோபாலின் பதவிக் காலம் இன்னும் 2 மாதங்களில் (ஜூலை 2008) முடிவுக்கு வருகிறது, நல்ல வேளை தீர்ப்பு அதற்கு முன்பே வந்து விட்டது :)

தற்போது அமைச்சர், 'இது மத்திய அரசின் முடிவு, எனது தனிப்பட்ட முடிவு அல்ல, அதனால், இந்த தீர்ப்பு தொடர்பாக தான் பதவி விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை' என்று கூறியதாக ஒரு செய்தியில் வந்திருக்கிறது. (CNN-IBN).

வேணுகோபால் தொடர்பான எனது முந்தைய பதிவுகள்:
http://balaji_ammu.blogspot.com/2006/07/blog-post_07.html
http://balaji_ammu.blogspot.com/2006/07/blog-post_09.html

எ.அ.பாலா

Thursday, April 24, 2008

435. விவேகானந்தர் இல்லப் பிரச்சினை - தமிழக அரசு பல்டி ?

லேடி வில்லிங்க்டன் பள்ளிக்கு அருகில் உள்ள விவேகானந்தர் நினைவு இல்லத்தை இடித்து விட்டு, அந்த இடத்தில், தமிழ்ச் செம்மொழி மையம் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், அரசின் பொதுப்பணித் துறையைச் சேர்ந்த இரு அதிகாரிகள், "விவேகானந்தர் இல்லத்தை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள வேறு கட்டடத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். இந்த இடத்தில் தமிழ் செம்மொழி மையம் அமையவுள்ளது" என்று வாய்மொழியாக அரசின் எண்ணத்தை மடத்தின் பொறுப்பாளர்களிடம் தெரிவித்ததாகவும், ஊடகங்களில் செய்திகள் வந்தன. 

மேலும், இது குறித்து ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி கவுதமானந்தர் கூறியதாவது:

எங்களது மடத்திற்கு தொடர்பு கொண்ட தொழில் அதிபர் ஒருவர், "விவேகானந்தர் இல்லம் உள்ள இடத்தை முதல்வர் கருணாநிதி காலி செய்யச் சொல்லியுள்ளார். எனவே, காலி செய்து கொடுத்து விடுங்கள்' என எங்களது மேலாளரிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவர், "மடத்தின் தலைவர் வெளியூர் சென்றுள்ளார். அவர் 23ம்தேதி திரும்புவார். அவர் வந்ததும் தகவல் தெரிவித்து, முதல்வரை சந்திக்க சொல்கிறேன்" என பதில் தெரிவித்துள்ளார். பிறகு, மீண்டும் தொடர்பு கொண்ட அந்த தொழிலதிபர், "முதல்வரிடம் நீங்கள் சொன்னதை தெரிவித்தேன். உங்கள் தலைவர் 23ம்தேதி சென்னை திரும்பியவுடன் 24ம்தேதி இடத்தை காலி செய்து விடுங்கள். அதன் பின் வேண்டுமானால் என்னை வந்து சந்திக்கட்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்" எனக் கூறினார்.

இதில் கவனிக்கப்பட வேண்டியது, அந்த தொழில் அதிபர் நேரடியாக முதல்வரின் பெயரைச் சொல்லி  வி.இல்லத்து மேலாளரை (இடத்தை காலி செய்ய வேண்டி) அரசியல் ரீதியாக அச்சுறுத்திய சமாச்சாரம் தான் :(

அரசின் கட்டாயத்தால், எங்கே வி.இல்லத்தை காலி செய்து கொண்டு ராமகிருஷ்ணா மடத்தினர் சென்று விடுவார்களோ என்று எண்ணிக் கொண்டு, பல வருடங்களுக்குப் பின் மீண்டும் விவேகானந்தரின் நினைவு இல்லத்துக்கு நேற்று ஒரு விசிட் அடித்தேன்.  நேற்று வி.இல்லத்திற்கு வார விடுமுறையாக இருந்தும், (நுழைவுக் கட்டணம் இல்லாமல்) எனக்கு ஸ்பெஷல் அனுமதி கிடைத்தது சுவாமி விவேகானந்தரின் அருள் தான் ! 

அமைதியான, ரம்யமான சூழல் !  இந்து சமயம் பற்றி ஒரு முகவுரை தரும் வகையில் போஸ்டர்களும், ஓவியங்களும், சுவாமிஜியின் அறிவுரைகளும், அவரது வாழ்க்கை குறிப்புகளும், புகைப்படங்களும், மூன்று தளங்களில் அமைக்கப்பட்ட கண்காட்சியில் காணப்பட்டன.  சுவாமிஜி, ராமகிருஷ்ணர் மற்றும் இந்து சமயம் சார்ந்த அருமையான புத்தகங்கள் விற்பனைக்கு இங்கு கிடைக்கின்றன. 

1893-இல் சிகாகோ உலக சமய பாராளுமன்றத்தில் சுவாமிஜி, உலகப் பிரசித்தி பெற்ற சமய / தத்துவச் சொற்பொழிவுகளை வழங்கி விட்டு, ஒரு நான்காண்டுகள் உலகப்பயணத்திற்குப் பின், 1897-இல் சென்னைக்கு இரண்டாம் முறை வந்தபோது, ஒரு வார காலம், வி.இல்லத்தில் உள்ள ஓர் அறையில் தங்கியிருந்தார். அந்த அறை தற்போது (விரும்புபவர்கள்) தியானம் செய்ய பயன்படுகிறது.  தியானத்தையே மனிதனின் பல இடர்களுக்கு மருந்தாக சுவாமிஜி பரிந்துரைத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

வி.இல்லத்தை அரசு காலி செய்ய வற்புறுத்திய பிரச்சினைக்கு மீண்டும் வருவோம் !

இப்போது எல்லாமே தலைகீழாக மாறியது போலத் (அல்லது, முதல்வர் பெயரை அந்த தொழிலதிபர் தவறாகப் பயன்படுத்தியது போலத்) தெரிகிறது , முதல்வர் கருணாநிதி இன்று சட்டசபையில் கூறியிருப்பதை வைத்துப் பார்த்தால் !!!  அதாவது,
 
விவேகானந்தர் இல்லத்தை இடிக்கும் பேச்சிற்கே இடமில்லை என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.  தமிழ் செம்மொழி ஆய்வு மையத்திற்காக விவேகானந்தர் இல்லத்தை இடிப்பது தொடர்பாக சட்டசபையில் இன்று எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பினர். இதையடுத்து பேசிய முதல்வர், விவேகானந்தர் மீது தனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு என்றும், விவேகானந்தர் இல்லத்தை இடிக்கும் பேச்சிற்கே இடமில்லை என்றும் கூறினார். 

என்ன தான் நடந்தது / நடக்கிறது / நடக்கப்போகிறது என்பது சுவாமிஜிக்கே வெளிச்சம் !!!! 

எ.அ.பாலா

நன்றி: தினமலர்

Thursday, April 10, 2008

27 சதவீத இடஒதுக்கீடு சட்டம் செல்லும் : சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி : ஓபிசி பிரிவினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு சட்டம் செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மத்திய அரசின் ஐ.ஐ.எம்., ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு சட்டம் கொண்டுவந்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த சட்டம் செல்லாது என அறிவிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதில் ஓ.பி.சி., பிரிவினருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு சட்டம் செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ஓ.பி.சி., சான்றிதழில் கிரீமி லேயர் இருக்காது எனவும் கூறியுள்ளது.

நன்றி: தினமலர்

எம்.எல்.ஏ, எம்.பி வாரிசுகள் இட ஒதுக்கீட்டிலிருந்து விலக்கப்பட்டிருப்பது ஒரு நல்ல செய்தி.

Tuesday, April 08, 2008

433. ஓகேனக்கல், வக்கீல்கள், சினிமாக்காரர்கள், அரசியல் et al ...

ஒகேனக்கல் பிரச்சினை குறித்து சில எண்ணங்கள்:

1. இப்பிரச்சினைக்கு மூல காரணம் பிஜேபியின் எட்டியூரப்பா தான் என்றாலும், நமது முதல்வர் 'எலும்பு''முறிவு' பற்றி பேசாமல் இருந்திருந்தால், பிரச்சினை இவ்வளவு பெரிதாகியிருக்காது தான்! கர்னாடகத்தில் வாழும் தமிழர்கள் மேல் பாய வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த (கன்னட ரக்ஷண வேதிகே மற்றும் வட்டாள் நாகராஜ் சார்ந்த அமைப்புகளின்) கன்னட வெறியர்களுக்கு (பெங்களூரில் தமிழர்க்கு எதிராக வன்முறையில் இறங்குவதற்கு) முதல்வரின் பேச்சு, காரணத்தை ஏற்படுத்தித் தந்தது.

2. அது போலவே, அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி, திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடிவெடுத்த பிறகு, திடீரென்று '2 மாதம் ஒத்தி வைப்பு' என்று தன்னிச்சையாக தமிழக முதல்வர் முடிவெடுத்தது, எட்டியூரப்பாவின் 'வாக்கு வங்கி' அரசியலுக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல! கன்னட வெறியர்களின் வன்முறை குறித்த ஞானோதயம் அன்னாருக்குத் திடீரென்று தோன்றியது ஆச்சரியமாக உள்ளது :(

3. சட்டத்தைக் கையில் எடுத்து செயல்படுவதிலும், வன்முறையிலும் மிகுந்த ஆர்வம் காட்டும் நமது வழக்கறிஞர்கள், சங்கீதா உணவகங்களில் செய்த கலவரம் மிக்க கண்டனத்துக்குரியது! சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்கள் செய்கிற காரியமா இது ?

4. 'உலகப்பொதுமறை' என்று போற்றப்படும் திருக்குறளை இயற்றிய வள்ளுவனுக்கே பெங்களூரில் சிலை அமைக்க, பல காலமாக கன்னட வெறியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது, நாம் அறிந்தது தானே! கன்னட (வெறி) அமைப்புகள், பெங்களூர் வாழ் தமிழர்களால் கன்னடர்களின் வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்படுவது போல ஒரு (தவறான) சிந்தனையை, சாமானிய கன்னடர்களின் மனதில் சிறிது சிறிதாக விஷம் போல ஏற்றியுள்ளதே, அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம்.

5. அடுத்து, தமிழ்த் திரைப்படத் துறையினரின் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நிச்சயம் தேவையில்லாத ஒன்று. இவர்களுக்குத் தான் தமிழுணர்வு வழிவது போல ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்! அன்று பேசிய சிலரின் (முக்கியமாக சத்தியராஜ்!) பேச்சு, கர்னாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு மேலும் தலைவலி உண்டாக்குமே அன்றி, பிரச்சினையை சுமுகமாக தீர்க்க எவ்வகையிலும் உதவாது. ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஜால்ரா போடுவதில் வல்லவர்களான திரைப்படத் துறையினர், தங்கள் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தால் அனைவருக்கும் நலம்!

ரஜினி மேல் சத்யராஜுக்கு இருக்கும் பொறாமையும், காழ்ப்பும், அவரது அன்றைய பேச்சில் அப்பட்டமாகத் தெரிந்தது. "பெரியார்" படத்தில் நடித்து விட்டதாலேயே தனக்கு ஒரு 'சிறப்புத் தகுதி' வந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கும் சத்யராஜ் கூட்டத்தில் அத்தனை தாறுமாறாகப் பேசியும், அவரது பேச்சை ஒதுக்கித் தள்ளிய கன்னட வெறியர்கள், ரஜினியின் சாதாரணமான பேச்சை திரித்து, அவர் மீது பாயத் தொடங்கி உள்ளனர்! இந்த ஒரு விஷயத்திலேயே, சத்யராஜ் பேச்சுக்கு எந்த அளவு மதிப்பு உள்ளது / முக்கியத்துவம் தரப்படுகிறது என்பது கண்கூடு!

திரைப்படத் துறையினர் இப்படி நடந்து கொண்டதால், 'தமிழ் திரைப்படங்களுக்குத் தடை' என்ற எதிர்மறை விளைவு ஏற்பட்டு, அவர்களுக்குத் தான் நஷ்டம்!

6. "கண்ணுக்குக் கண்" என்பது எந்தப் பயனும் அளிக்காது என்பதை அனைவரும் (விடுதலைச் சிறுத்தைகள் உட்பட) புரிந்து செயல்பட வேண்டும். இங்கு சுகமாக, பத்திரமாக உட்கார்ந்து கொண்டு கர்னாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு பிரச்சினை ஏற்படுவது போல பேசுவதும், செயல்படுவதும் தவறில்லையா ? தற்போது நிலவும் இக்கட்டான சூழலில் பெங்களூர் தமிழ் சங்கமே, கன்னட அமைப்புகளுக்கு ஆதரவான நிலை எடுக்கத் தள்ளப்பட்டிருப்பதை கவனத்தில் கொள்வது அவசியமாகிறது!

7. 1998-இல் கர்னாடகவுடன் ஒகேனக்கல் திட்டத்திற்கான ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு, கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே, இத்திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டு மெத்தனப் போக்கை கடைபிடித்ததும் கூட, இப்போது உருவாகியிருக்கும் பிரச்சினைக்கு ஒரு முக்கியக் காரணம்! மேலும், இக்குடிநீர் திட்டத்தை அப்போதே நிறைவேற்றியிருந்தால் குறைந்த செலவே (350-400 கோடியில்) ஆகியிருக்கும். தற்போதைய திட்டச் செலவு மதிப்பீடு 1334 கோடி!!!

8. தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பிஜேபி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையே பிராந்திய ரீதியில் குறுகிய நோக்குடன் செயல்படும்போது, மாநிலக் கட்சிகள் பற்றிப் பேசிப் புண்ணியமில்லை! வட இந்தியர்களுக்கு எதிராக ராஜ் தாக்கரேயின் நவநிர்மாண் சேனா நடத்திய வன்முறை, தற்போதைய சூழலில் நினைவு கூரத் தக்கது. இது போன்ற பிரிவினைவாத அவலங்கள் தொடருமானால், ஏற்கனவே நம்மிடையே விரவி இருக்கும் சாதி/மத/இனப் பிரச்சினைகள் தீவிர நிலையை அடைந்து, சோவியத் யூனியனுக்கு ஏற்பட்ட கதி (உடனடியாக இல்லாவிட்டாலும்!) இந்தியாவுக்கும் ஏற்படும் அபாயம் இருப்பதாகத் தோன்றுகிறது!

Final Word: காவிரிப் பிரச்சினை போல, முல்லைப் பெரியார் போல, ஓகேனக்கல் பிரச்சினைக்கும் வெகு நாட்களுக்கு எவ்வித தீர்வும் ஏற்படப் போவதில்லை என்பது தான் நிதர்சனம். இன்னும் 2-3 மாதங்களில் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே, இந்த விஷயத்தில் ஆர்வம் போய் விடும். திரும்பவும் யாராவது கிளப்பி விடும் வரை, மக்களும் சரி, ஊடகங்களும் சரி, இப்பிரச்சினையை மறந்து இருப்பார்கள் !!!

எ.அ.பாலா

Monday, April 07, 2008

வ(மு)ட்டாள் நாகராஜ் பேட்டி

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தால் கர்நாடக மக்களுக்கு என்ன விதமான பாதிப்புகள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

(நாகராஜுக்கு அதுபற்றி உடனடியாகப் பதில் சொல்லத் தெரியவில்லை. சிறிது யோசித்து விட்டே பேசினார்). ??அது எங்கள் நாட்டுத் தண்ணீர். அது எங்கள் மக்களுக்குத்தான் பயன்படணும். அதைத் தமிழ் மக்கள் குடிக்கக் கொடுக்க மாட்டோம். அப்படி நடந்தால் என்ன செய்வோம் என்றே எங்களுக்குத் தெரியாது. உயிரைக் கொடுத்தாவது அந்தத் திட்டத்தைத் தடுப்போம். எங்களிடம் (கர்நாடக அரசிடம்) கேட்காமல் எப்படி அந்தத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது? அது எல்லாமே கர்நாடக இடம்தான். எங்களிடம் அனுமதி பெற்றுத்தான் அங்கே கையை வைக்க வேண்டும்.??

எது உங்கள் இடம் என்கிறீர்கள்? ஒகேனக்கல் பகுதி, தமிழக எல்லைக்குள்தானே வருகிறது?

??அதெப்படிச் சொல்வீர்கள்? தமிழகத்தில் உள்ள தலைவர்கள்தான் அப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நிஜம் என்ன தெரியுமா? கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும் உதகமண்டலம் எல்லாமே கர்நாடக மாநிலத்துக்குச் சொந்தமானதுதான். எல்லாவற்றையும் தமிழர்கள் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது, கர்நாடகத்திடம் கருத்துக் கேட்காமல் கைவைப்பது எவ்வளவு பெரிய தப்பு என்று தமிழ்நாட்டுக்காரர்களுக்குத் தெரிய வேண்டாமா? அதற்காகத்தான் இத்தனை எதிர்ப்பைக் காட்டுகிறோம்.??

அதற்காக தமிழகத் தலைவர்களின் படத்தை எரிப்பதும், திரையரங்குகளைச் சேதப்படுத்துவதும் சரியானதா?

??என்ன செய்யச் சொல்கிறீர்கள்? கன்னட மொழிப் பற்றாளர்கள் அவர்கள். எங்களைப் போல அவர்கள் பாணியில் போராட்டங்களைச் செய்கின்றனர். அதெல்லாம் வேண்டாம் என்றால் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் எங்கள் மண் மீது கண் வைக்கவேண்டாம் என்று சொல்லுங்கள்.??

கர்நாடக மாநில எல்லையைக் கடந்து, நீர் அளவை நிலையத்தைத் தாண்டி அதற்கு அப்பால்தான் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கான இடத்தையே குறிப்பிட்டிருக்கிறது தமிழக அரசு. அப்படியிருக்கும் போது கர்நாடக மக்களுக்கு எப்படி தண்ணீர் பிரச்னை வரும்?

??அதுதான் ஏற்கெனவே சொன்னேனே. புரியவில்லையா உங்களுக்கு? கிருஷ்ணகிரி வரைக்கும் கர்நாடக மாநிலம்தான் என்கிறபோது, தமிழக அரசு தேர்வு செய்துள்ள இடமும், கர்நாடக அரசுக்குச் சொந்தமானதுதானே? நீங்கள் ஒகேனக்கல்லை மறந்து விடுங்கள். நாங்கள் போராட்டத்தை மறந்து விடுகிறோம்.??

கேபிள் ஆபரேட்டர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளீர்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளதே?

??தமிழ் சேனல்களை மட்டும் ஒளிபரப்பக்கூடாது என்று சொல்லியிருக்கிறோம். கேபிள் ஆபரேட்டர்களும் கூட்டம் போட்டு, உண்ணாவிரத தினத்தில் மட்டும் ஒளிபரப்பைத் தடை செய்து, மற்ற நாட்களில் கலைஞர் சேனலைத் தவிர மற்ற தமிழ் சேனல்களை ஒளிபரப்ப முடிவெடுத்துள்ளனர். ஒகேனக்கல் பிரச்னை தீர்கிறவரை கர்நாடகாவில் கலைஞர் தொலைக்காட்சியை அவர்கள் காட்ட மாட்டார்கள், காட்டவும் முடியாது.??

எதற்காக அந்தக் குறிப்பிட்ட சேனல் மீது இவ்வளவு கோபம்?

??ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை அறிவித்தவர் கருணாநிதி. அவருடைய சேனல்தானே அது? அதில் ஒகேனக்கல் திட்டத்துக்கு ஆதரவாக செய்தியைப் பரப்பி விடுவார்கள். அதனால்தான் அந்தக் குறிப்பிட்ட சேனலை மட்டும் பிரச்னை தீர்கிறவரை ஒளிபரப்பக்கூடாது என்கிறோம். அதேபோல், கருணாநிதியின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர் மத்திய அரசை மிரட்டியே பணிய வைக்கிறார். மத்திய அரசை தனது சொந்த லாபத்துக்காக தவறாகப் பயன்படுத்துகிறார். கருணாநிதியை நாடு கடத்த வேண்டும். மத்திய அரசை ஏமாற்றி தமிழகத்துக்குச் சாதகமான எல்லாவற்றையும் வாங்கிவிடுகிறார். அப்படித்தான் மத்திய அரசிடம் ஒகேனக்கல் திட்டத்திலும் ஏமாற்றியிருக்கிறார். இந்தத் திட்டத்தினால் பெங்களூரு மக்களுக்கு தண்ணீர்ப் பிரச்னை வந்துவிடும். அதை கருணாநிதி மூடி மறைத்து விட்டார். கேபிள் ஆபரேட்டர்கள் எடுத்திருக்கும் இந்த முடிவை நான் வரவேற்கிறேன்.??

ஒகேனக்கல் நீரை தமிழக அரசு குடிநீர்த் திட்டத்துக்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஏற்கெனவே பெங்களூரு ஒப்பந்தத்தில் கர்நாடக அரசு கையப்பமிட்டிருக்கிறதே?

??அது பத்து வருடத்துக்கு முன்னால் போடப்பட்ட ஒப்பந்தம். பெங்களூரு குடிநீர்த் திட்டம் என்று ஒன்று வந்த போது, அப்போது தமிழக அரசு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. எனவே, மத்திய அரசு அதில் தலையிட்டு, ?காவிரிக்குக் குறுக்கே பெங்களூரு குடிநீர்த் திட்டத்தை கர்நாடக அரசு நிறைவேற்றிக் கொள்ளலாம். அதே வேளையில் ஒகேனக்கல்லில் இருந்து தமிழகம் குடிநீருக்காக ஒரு திட்டத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று கூறியது. அதை நான் மறக்கவில்லை. அப்போது மத்திய அரசு முன்னின்று பஞ்சாயத்துச் செய்து வைத்தது. ஆனால், கருணாநிதி தன்னுடைய செல்வாக்கை வைத்துக்கொண்டு கர்நாடகத்திடம் மத்திய அரசு கருத்துக் கூட கேட்டுவிடாமல் தடுத்து, அவர் நாட்டு மக்களுக்கு மட்டும் நல்லது செய்கிறார். அது நியாயமா? அதனால்தான் அவரை நாடு கடத்த வேண்டும் என்கிறேன். அதுதான் சரியானது!?? என்று அனல் பறக்க தனது பேட்டியை முடித்துக? கொண்டார் வாட்டாள்

நன்றி :குமுதம் ரிப்போட்டர்

431. அந்தோணி முத்துவின் வார்த்தைகள் - உள்ளத்திலிருந்து !

என் இனிய கர்ணர்களே,

உங்கள் அன்பினாலும் தயவினாலும் எனக்கு மடிக்கணினி கிடைத்திருக்கிறது.
மனமெல்லாம் சந்தோஷத்தினால் பூத்துக் குலுங்குகிறது.
என் பழைய மேசைக் கணினிக்கும் இதற்கும் மலையளவு வித்தியாசம்.
அது Celeron 800 mhz processor, 128 mb RAM. சமயங்களில் ஆமை கூடத் தோற்று விடும்.

இது Core-2 Duo 1.83 Ghz processor, 2 Mb RAM, DVD Writer, Webcam, மற்றும் நிறைய வசதிகளைக் கொண்டது. அது ஆமை வேகம் என்றால் இது புலிப்பாய்ச்சல்.

அந்த டிசம்பர் மாதக் குளிரில் நடுங்கியபடி, கடவுளுக்கு நான் எழுதிய அந்தக் கடிதத்திற்கு எனக்கு இவ்வளவு அழகான பதில் கிடைக்குமென நான் எதிர்பார்க்கவில்லை.

கடவுள் நேரிடையாக செயலாற்றுவதில்லை.

தாம் தேர்ந்தெடுத்த சில நல்ல மனிதர்களின் மூலமாகவே அவர் செயல்படுகிறார் என்று எப்போதோ படித்தது நினைவுக்கு வருகிறது.

அவரது செயல்களைச் செய்பவர்கள் அவராகவே மாறிவிடுகிறார்கள்.

இதை வெறுமனே ஒரு எலக்ட்ரானிக் பொருளாக என்னால் பார்க்க முடியவில்லை.

என் துன்பத்தைத் தங்களின் துன்பமாக உணர்ந்து….
நான் நலமாய் இருக்க வேண்டும் என மனதார விரும்பி….
பிரார்த்தனையோடு தங்களின் வியர்வைத்துளியையும் சேர்த்து….
மனம் நிறைந்த வாழ்த்துக்களோடு….
உருவாக்கப்பட்ட உயிருள்ள ஒரு ஜீவனாக இந்த மடிக்கணினியைப் பார்க்கிறேன்.

இத்தனைக்கும் இதற்காக உதவியவர்கள் எவரும் ஏதோ மாபெரும் கோடீஸ்வரர்களோ
வசதிகளில் புரள்பவர்களோ அல்ல.

அத்தனை பேருமே என் போன்ற நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தான்.

அதனால்தானோ என்னவோ என் வலியையும் வேதனையையும் அவர்களால் முழுமையாக உணர முடிந்திருக்கிறதென நம்புகிறேன்.

நான் இதைத் திறந்து வேலை செய்யும்போதெல்லாம்,
இதற்கு உதவின, உதவ நினைத்த் அத்தனை அன்பு ஆத்மாக்களும்…
மனதளவில் என்னுடன் இருப்பதாக உணர்கிறேன்.

நான் தனியன் இல்லை எனக்காகவும் கவலைப்பட இத்தனை ஜீவன்கள் இருக்கிறார்கள் என்கிற உணர்வே ஆயிரம் யானைகளின் பலத்தைக் கொடுக்கிறது.

அனைவருக்கும் என்னுடைய கண்ணீர் கலந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.

எல்லாம் வல்ல இறை சக்தி அனைவருக்கும் நீண்ட ஆயுளையும், விரும்பியதனைத்தையும் இடைவிடாது வழங்க மனமுருகிப் பிரார்த்திக்கிறேன்.

எவரஸ்ட்டின் உச்சிக்கு ஏறி இப்படி கத்த வேண்டும் போலத் தோன்றுகிறது.

நான் அதிர்ஷ்டக்காரன்.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

Regards
Anthony Muthu.

Thursday, April 03, 2008

Go Protea Go (அல்லது) உருப்படாத இந்திய கிரிக்கெட் அணி

நண்பர் மோகன்தாசுக்கு மகிழ்ச்சி தரும் வகையில், தென்னாபிரிக்காவிற்கு எதிரான 2-வது டெஸ்ட்டின் முதல் நாளான இன்று இந்தியா தனது முதல் இன்னிங்க்ஸில் 20 ஓவர்களில், உணவு இடைவேளைக்கு முன்பாகவே, 76 ரன்களுக்கு, தென்னாபிரிக்காவின் அதிவேக short pitched பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சுருண்டது :(  இது சற்றே ஆச்சரியமாக இருந்தாலும்,  இந்திய கிரிக்கெட் அணியுடனான எனது தொடர்பு பல ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வதால், பெரிய அளவில் அதிர்ச்சி எதுவும் ஏற்படவில்லை.  

IPL ஏலத்தில் பெருமளவில் பணத்தைக் கொட்டி, இதுகளை எல்லாம் தங்கள் அணிக்கு தேர்ந்தெடுத்த ஷாருக், மால்யா, ப்ரீத்தி போன்றவர்களை தூணில் கட்டி உதைக்க வேண்டும்,  ஏனெனில் வெட்கங்கெட்ட நமது கிரிக்கெட் வீரர்களைத் திட்டுவதில் எந்தப் பயனும் இல்லை !!!  வேலைப்பளு அழுத்துவதால், இந்திய அணியின் இத்தகைய கேவலமான வீழ்ச்சி பற்றி எதுவும் கூறாமல், இந்திய அணியின் முதல் இன்னிங்க்ஸ் ஸ்கோர் கார்டை உங்கள் பார்வைக்கு அளித்து விடை பெறுகிறேன்.
 
India 76-10 (20) Runs Balls 4s 6s  SR  
W Jaffer c Smith b Ntini 9   14  2 0  64.29  
V Sehwag b Steyn 6   12  1 0  50.00  
R Dravid b Steyn 3   26  0 0  11.54  
VVS Laxman b Ntini 3   7  0 0  42.86  
S Ganguly b Ntini 0   2  0 0  0.00  
MS Dhoni c Boucher b Morkel 14   22  2 0  63.64  
I Pathan not out 21   17  3 0  123.53  
*A Kumble b Morkel 0   2  0 0  0.00  
Harbhajan Singh lbw b Steyn 1   6  0 0  16.67  
RP Singh c Smith b Steyn 0   11  0 0  0.00  
S Sreesanth b Steyn 0   3  0 0  0.00  
Extras: 18 ( b:4 lb:11 nb:2 w:2)
Total: 76-10 (20) | Curr. RR: 3.80
FOW: W Jaffer (16-1, 3.3), V Sehwag (24-2, 4.4), VVS Laxman (30-3, 7.1), S Ganguly (30-4, 7.3), R Dravid (53-5, 13.1), MS Dhoni (55-6, 14.2), *A Kumble (55-7, 14.4), Harbhajan Singh (56-8, 15.4), RP Singh (76-9, 19.3), S Sreesanth (76-10, 20)
South Africa O M R W Nb Wd RPO  
D Steyn 8 2 23 5 1 2 2.88  
M Ntini 6 1 18 3 0 0 3.00  
M Morkel 6 1 20 2 1 0 3.33

Wednesday, April 02, 2008

429. திபெத் - சீன அராஜகமும், இந்திய கோழைத்தனமும்

உலகத்தின் கூரை என்று அழைக்கப்படும் திபெத்தில் சீனக் கம்யூனிஸ்டுகள், அமைதியைப் போற்றும் புத்த பிட்சுக்கள் மற்றும் திபெத்திய மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டிருக்கும் அநியாய வன்முறை குறித்து பல செய்திகள் வந்துள்ளன. சீனாவின் இந்த அராஜக, ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து உலகெங்கும் உள்ள திபெத்திய அமைப்புகள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றன. ஐரோப்பியன் யூனியனில் உள்ள அரசியல் தலைவர்கள் சீனாவின் போக்கை கண்டித்துள்ளனர். அக்டோபர் 1950-இல் சீனா திபெத்தை ஆக்ரமித்தபோது, அமெரிக்காவுக்கு திபெத் மீது ஆர்வமில்லை, ஆனால் இப்போதோ, சீனா ஒரு பொருளாதார வல்லரசாக இருப்பதோடு, அமெரிக்காவின் economic interests-ம் சேர்ந்து விடுவதால், தலாய் லாமாவுடன் பேச்சு வார்த்தை நடத்துமாறு அமெரிக்கா சீனாவை மென்மையாகவே கேட்டுக் கொண்டுள்ளது !!!

(அடிமைத்தளையின் வலியை நன்கு அனுபவித்து, போராடி சுதந்திரம் பெற்ற) ஜனநாயக இந்தியாவோ, சீனக் கம்யூனிஸ்ட்களுக்கு பயந்து கொண்டு (நமக்கு எதிராக சீனர்களால் ஒரு எழவும் செய்ய முடியாது என்றபோதிலும்!) கவைக்குதவாத பேச்சு பேசிக் கொண்டு, சீனர்களுக்கு ஜால்ரா அடித்துக் கொண்டிருக்கிறது, மகா கேவலம் ! இந்தியாவில் உள்ள சீனத் தூதரகம் முன்பு திபெத்தியர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததை முன்வைத்து, சீன அரசு சீனாவில் உள்ள நமது இந்திய வெளியுறவுத் தூதருக்கு நடுஇரவில் சம்மன் அனுப்பி, அவரை வரவழைத்து தனது கண்டனத்தை பதிவு செய்தது.

நடு இரவில் சீனர்கள் அழைத்தால், நமது தூதர் பதறி அடித்துக் கொண்டு ஓட வேண்டுமா என்ன ? 'காலையில் சந்திக்கிறேன்' என்று கூட கூற முடியாமல் அப்படி என்ன ஒரு பேடித்தனம், வெட்கங்கெட்டத்தனம் ? இது போல சுயமரியாதை இல்லாமல் இயங்கும் நாமெல்லாம் 'இந்திய இறையாண்மை' பற்றிப் பேசினால், அதை விட வெட்கக்கேடு வேறு ஏதாவது உண்டா ??? இந்தியா இவ்வளவு வாலாட்டியும், திபெத்தில் அமைதி நிலவுகிறது என்று (டிராமா போட்டு) காட்டுவதற்காக சீன அரசு அழைத்த பிறநாட்டுப் பிரதிநிதிகள் குழுவில் இந்தியாவுக்கு இடம் வழங்கப்படவில்லை, இதை விடக் கேவலம் வேறு ஏதாவது உண்டா ?

சீன அரசாங்கத்துக்கு ஒரு பெரிய பயம் உண்டு. 1989-இல், திபெத்தில் தொடங்கிய போராட்டம், சீன மாணவர்களுக்கு உத்வேகத்தை தந்து, அவர்கள் கம்யூனிஸ்ட் அரசின் அடக்குமுறைக்கு எதிராக டியனமேன் ஸ்கொயரில் தொடர்ந்து 6-7 வாரங்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இறுதியில் சீன அரசு, ராணுவத்தின் துணையோடு, டாங்குகளை தனது மக்கள் மேலேயே ஏவி, பலரை கொடூரமாக பலி கொண்டு, அதே நேரத்தில், அந்த அரசு வன்முறை (State sponsored violence) பற்றிய செய்திகள் வெளி உலகுக்கு பெரிய அளவில் தெரியாத வண்ணம், ஜனநாயகப் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது ! டியனமேன் ஸ்கொயரில் ஏற்பட்ட ரத்தக் கறையைக் கழுவ, பல நாட்கள் ஆனது !!!

கீழே உள்ள படம், உலகப்